செய்திகள்
முழு ஊரடங்கில் சில தளர்வுகள்: பழக்கடை, நாட்டு மருந்து கடைகள் திறக்க அனுமதி
மதியம் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்ட பிறகே மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கினார்கள். இருப்பினும் பால் வண்டிகள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் எப்போதும் போல ஓடியது.
சென்னை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முதல் நாளான நேற்று காலையில் மக்கள் வழக்கம் போல வெளியில் நடமாடினார்கள். இன்றும் அதுபோன்று மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.
காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறந்து இருந்ததால் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் வெளியில் வந்தனர்.
மதியம் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்ட பிறகே மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கினார்கள். இருப்பினும் பால் வண்டிகள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் எப்போதும் போல ஓடியது.
இந்நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காய்கறி, மளிகை கடைகளை போன்று பழ கடைகளும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி.
மற்ற மருந்து கடைகளை போல நாட்டு மருந்து கடைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒருநாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.