செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 552 பேருக்கு கொரோனா- சிகிச்சை பலனின்றி 2 பேர் பலி
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 656 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 656 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 794 இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்ட 2,822 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருப்பூரை சேர்ந்த 68 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுபோல் 55 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளது.