செய்திகள்
உடன்குடி பகுதியில் அரசு டாக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று
உடன்குடி அருகே மெஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலைய அரசு டாக்டர் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மெஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர், உதவியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து மெஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், உடன்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் 8 பேர், வெள்ளாளன்விளையில் 29 வயது பெண், மெஞ்ஞானபுரம் மாணிக்கபுரத்தைச் சேர்ந்த 55 வயது பெண், உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த 20 வயது ஆண், நங்கைமொழியைச் சேர்ந்த 27 வயது ஆண், குமாரலட்சுமிபுரத்தைச் சேர்ந்த 39 வயது பெண் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமையில் உடன்குடி வட்டாரத்தில் 6 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம், கொரோனா தடுப்பு பணிகள் நடந்தது.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் அனுபிரியன் கூறுகையில்,‘ தொற்று உறுதி செய்யப்பட்ட இடங்களில் சுகாதாரப் பணிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் அரசின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட உடன்குடி பஜார் வீதிகள் மற்றும் 18 வார்டுகள் உள்ள கிராமப்புறங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு மேற்பார்வையில் பேரூராட்சி ஊழியர்கள் தினசரி மார்க்கெட், வங்கிகள். ஏ.டி.எம். பஜார் வீதிகள், இறைச்சி மீன் கடைகள், ஆகியவற்றில் கிருமிநாசினி தெளித்தனர்.. மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனைத்து கடைகளிலும் கொரோனா விழிப்புணர்வு கட்டுப்பாடுகள் பின்பற்றபடுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.