செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட பரமசிவன், சாரதா.

சுசீந்திரம் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை - பரபரப்பு கடிதம் சிக்கியது

Published On 2021-05-07 10:53 GMT   |   Update On 2021-05-07 10:53 GMT
சுசீந்திரம் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

என்.ஜி.ஓ. காலனி:

சுசீந்திரம் அருகே நல்லூர் மறுகால்தலை காலனியைச் சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30), செல்போன் மற்றும் லேப்டாப் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார்.

வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் சாரதா (35). இவருக்கு திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவத்திற்கும், சாரதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தற்போது மறுகால்தலை காலனி பகுதியில் குடும்பம் நடத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களாக சாரதாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. நேற்று காலையில் உடல்நிலை மோசமானதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பரமசிவன் அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே சாரதா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பரமசிவன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சாரதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

மனைவி இறந்த சோகத்தில் பரமசிவன் நேற்றிரவு வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த தனது தாயாரிடம் சரிவர பேசாமல் இருந்தார். மனைவி சாரதா இறந்ததை கூறி புலம்பி கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் மனைவியின் துப்பட்டாவில் பரமசிவன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த அவரது தாயார் கதறி அழுதார். பின்னர் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் காபிரியேல், ஏட்டு சுடர் மாதவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பிணமாக கிடந்த பரமசிவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரமசிவன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் பரமசிவன் கூறி இருப்பதாவது:-

எனது மனைவி இல்லாத உலகத்தில் நானும் இனி உயிர் வாழ மாட்டேன். எங்களது கடைசி ஆசை எங்கள் இருவரையும் இணைத்து புதைக்க வேண்டும். எரிக்கக்கூடாது. எங்கள் இருவரையும் பிரிக்க வேண்டாம். என்னுடைய உயிர் எனது மனைவிக்கு மட்டும்தான். ஒரே இடத்தில் கை சேர்த்து புதைக்க வேண்டும். என் மனைவி கழுத்தில் கிடக்கும் தாலியை கழற்றக்கூடாது. என் சாவுக்கு நான் மட்டுமே காரணம்.

இவ்வாறு கடிதத்தில் கூறி இருந்தார்.

பரமசிவன், சாரதா இருவரின் உடல்களும் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர். கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து பலியான சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News