செய்திகள்
மு.க.ஸ்டாலின்

பதவியேற்பு விழாவை வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்- தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2021-05-07 02:16 GMT   |   Update On 2021-05-07 02:16 GMT
உங்கள் உடல் நலமே முக்கியம் என்பதால், பதவியேற்பு விழாவை வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒளி விளக்காய், நம் நாட்டுக்கு எப்போதும் நற்பணியாற்றும் தொண்டனாய்த் திகழ்ந்துவரும்; அண்ணாவால் உருவாக்கப்பட்டு, கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்ட தி.மு.க.வின் மீது நம்பிக்கை வைத்து, தமிழ்நாட்டு மக்கள் மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். 5 முறை தமிழகத்தை ஆண்ட இயக்கம்தான் நமது தி.மு.க. 6-வது முறையும் ஆட்சி அமைக்கும் அரிய வாய்ப்பைத் தமிழக மக்கள் மனமுவந்து வழங்கி இருக்கிறார்கள்.

தனிப்பெரும்பான்மை கட்சியாக தி.மு.க.வுக்கு ஆட்சி அமைக்கும் நல்வாய்ப்பை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4-ந்தேதி மாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கூடியது.

அக்கூட்டத்தில் தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சித்தலைவராக எனது பெயரை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்தார். உதயசூரியன் எனும் ஒப்பற்ற சின்னத்தில் வென்ற அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒருமனதாக இதனை ஏற்றுக்கொண்டார்கள். இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

பேரறிஞர் அண்ணா அலங்கரித்த நாற்காலியில், தலைவர் கருணாநிதி அமர்ந்து கோலோச்சிய பொறுப்பில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களால் உட்கார வைக்கப்படும் அளவுக்கு, உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, என்னை நான் படிப்படியாக வளர்த்துக் கொண்டதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்குத் தமிழக முதல்-அமைச்சராகப் பதவிப் பொறுப்பு ஏற்பு செய்துவைக்க இருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோகித். சட்டமன்ற உறுப்பினர்களது ஆதரவுக் கடிதத்தை நேற்றைய தினம் காலையில் கவர்னரிடம் ஒப்படைத்து வந்தோம். மே 7-ந்தேதி (இன்று) காலை 9 மணியளவில் பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.

மே 7-ந்தேதி, தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறித்துக்கொள்ளும் நாளாக மாற இருக்கிறது. தி.மு.க. 6-வது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்க இருக்கிறது. மீண்டும் தி.மு.க. ஆட்சி. கருணாநிதியின் கனவு நிறைவேறுகிறது என்ற மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், மனதின் ஓரத்தில் கவலையும் ஏற்படுகிறது.

ரத்தமும், வியர்வையும் சிந்தி கட்சிக்காக, நமது வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து, அவர்களுக்கு முன்னால், அவர்களின் மனம் நிறைவு கொள்ளும் வண்ணம், பதவியேற்க முடியவில்லையே என்பதுதான் எனது கவலைக்கு காரணம். இந்த வெற்றிக்கு காரணமான கதாநாயகர்கள், கட்சி தொண்டர்களாகிய நீங்கள்தான்.

உங்களது அயராத உழைப்பால், அசைக்கவியலாத உறுதியால், கம்பீரத்தால், கடின முயற்சியால் கிட்டியது இந்த வெற்றி. அதனால் மிகப்பெரிய அளவில், தொண்டர்கள் முன்னிலையில், பதவி ஏற்பு விழாவை நடத்தலாம் என்று தேர்தலுக்கு முன்னதாகவே சிந்தித்து வைத்திருந்தேன்.



ஆனால், கொரோனா என்ற பெருந்தொற்று, 2-வது பேரலையாக எழுந்து வீசும் இந்தச் சூழலில், அத்தகைய மக்கள் கூடும் மாபெரும் விழா நடத்த இயலாது. அதனால் கவர்னர் மாளிகையில், மிக எளிய முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வோர் தொண்டரின் உடல்நலன்தான் எனக்கு முக்கியம். அதனால் அனைவரும் தங்கள் இல்லத்தில் இருந்தபடியே, விழாவைத் தொலைக்காட்சி நேரலையில் காணுங்கள். தொண்டர்கள் அனைவரும் உடலால் உங்கள் வீட்டில் இருந்தாலும், உள்ளத்தால் சென்னையிலேதான், எம்முடனேதான் இருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த பாச உணர்வுதான் மகத்தான வெற்றிக்குக் காரணம்.

தி.மு.க. ஆட்சி - கருணாநிதி ஆட்சி என்பதே, பல லட்சக்கணக்கான தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்ட சொல்தான். ‘இத்தனை தொண்டர்களைப் பெற்றெடுக்க ஒரு தாய் வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் நாம்' என்றார் பேரறிஞர் அண்ணா. அத்தகைய கருணாநிதி எனும் ஒரு தாய்ப் பிள்ளைகளான தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இருக்கும் திசை நோக்கி வணங்கி தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்க நான் தயாராகிவருகிறேன்.

உங்களது உழைப்பு தி.மு.க. ஆட்சியை மலர வைத்தது. உங்களது வாழ்த்து எங்களைப் பெருமைப்படுத்தும். அனைவரும் ஒன்றுசேர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும், சம உரிமையும் கடமையும் உடைய, உயர்வான தமிழகத்தை உருவாக்கிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News