செய்திகள்
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வில் எதிர்க்கட்சி தலைவர் யார்?- இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு

Published On 2021-05-07 01:43 GMT   |   Update On 2021-05-07 01:43 GMT
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
சென்னை: 

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 65 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. அதன் கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், 16-வது சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் அ.தி.மு.க. இடம்பெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்க இருக்கிறார்கள்.



இதுதொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 7-5-2021 (இன்று) மாலை 4.30 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் (எதிர்க்கட்சி தலைவர்) தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. மேலும், கட்சியின் கொறடா தேர்ந்தெடுக்கப்படுவதுடன், 16-வது சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News