செய்திகள்
கைது

வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது- மேலும் 6 பேருக்கு வலைவீச்சு

Published On 2021-05-06 15:27 GMT   |   Update On 2021-05-06 15:27 GMT
திருச்சியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை பொன்மலை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பொன்மலைப்பட்டி:

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகரை சேர்ந்த மணிகண்டனின் மகன் மணிவாசகன் (வயது 21). இவர் அதே பகுதியில் கோழி இறைச்சிக்கடையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேலகல்கண்டார் கோட்டை ஆலத்தூர் பாலத்தின் அருகே அவர் நடந்து சென்ற போது, அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது.

இதுபற்றி தகவலறிந்த பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கொலை செய்யப்பட்ட மணிவாசகன், மேல கல்கண்டார் கோட்டை தமிழர் தெருவை சேர்ந்த ஸ்ரீநாத்(19) என்பவரின் கையை கடந்த ஆண்டு அரிவாளால் வெட்டியதும், அதனால் அவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதனால் முன்பகை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பின்னர் மணிவாசகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கில் ஸ்ரீநாத், கீழ கல்கண்டார் கோட்டை அண்ணாநகரை சேர்ந்த ராகேஷ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News