செய்திகள்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கண்டித்து பெரம்பலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

மேற்கு வங்காளத்தில் கட்சியினர் மீது தாக்குதல்: பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2021-05-06 14:43 GMT   |   Update On 2021-05-06 14:43 GMT
மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

மேற்கு வங்காளத்தில் தேர்தல் முன்விரோதத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதல்களை கண்டித்தும், வன்முறைகளுக்கு பொறுப்பு ஏற்று அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக கோரியும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நேற்று பாரதீய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை கட்சியின் பெரம்பலூர் தெற்கு மண்டல் தலைவர் ஜே.வெங்கடேசன், மாவட்ட தலைவர் சந்திரசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட துணைத்தலைவர் அசூர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன், செயற்குழு உறுப்பினர் சாமி.இளங்கோவன், சட்டமன்ற பொறுப்பாளர் கவுல்பாளையம் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிரசார பிரிவு ராமசாமி நன்றி கூறினார்.

அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன் தலைமையில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர தலைவர் வைரவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கோகுல் பாபு, நந்தினி ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் செந்தில் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த மாவட்ட, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொதுச் செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா ஆலத்தூர் ஒன்றிய தலைவர் சி.பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மகாமூர்த்தி, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் நீலமேகம் தலைமையில் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கட்சியின் மேற்கு ஒன்றிய தலைவர் நீலமேகம், கிழக்கு ஒன்றிய தலைவர் தவமணி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஒன்றிய தலைவர் அரங்கநாதன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் ஞானசேகரன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட தலைவர் அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

திருமானூர் பஸ் நிலையம் அருகே பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News