திருப்பூர் மாநகரில் ஊரடங்கை மீறி இரவு வெளியே சுற்றி திரிந்த 582 பேர் மீது வழக்கு
திருப்பூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதோடு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழக அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கை அறிவித்தது. இதனால் கடைகள் இரவு 9 மணியில் இருந்தே ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டு விடுகிறது. 10 மணிக்கு சாலைகள் வெறிச்சோடி கிடக்கும்.
மருத்துவ உதவி உள்ளிட்ட அத்தியாவசிய தேவையை தவிர யாரேனும் வெளியே வந்தால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதற்காக போலீசார் ஆங்காங்கே தடுப்பு கம்பிகள் வைத்து சாலையை அடைத்து விடுகின்றனர்.
அதன் படி திருப்பூர் மாவட்டத்தின் மாநகர் பகுதியில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சுரேஷ்குமார் நேரடி மேற்பார்வையில் மாநகரின் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பின் போது இரவு நேரங்களில் விதிகளை மீறி வெளியே சுற்றி திரிந்த 582 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதே போல் திருப்பூர் புறநகர் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.