செய்திகள்
கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்திய காட்சி

அண்ணனுக்கு பக்கத்தில் துயில் கொள்ளும் முத்தமிழறிஞருக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்

Published On 2021-05-02 17:06 GMT   |   Update On 2021-05-02 17:06 GMT
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை:

நடந்து முடிந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள, தி.மு.க.,வின் முக்கிய வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க., இளைஞரணி தலைவராக உள்ளார். இதற்கு முன் தி.மு.க., வரலாற்றில், இளைஞரணி தலைவராக பணியாற்றிய ஸ்டாலின், 1984ல் முதன் முறையாக சட்டசபை தேர்தலில், சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் கே.ஏ.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். ஸ்டாலின் தன் முதல் தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், தன், 43வது வயதில் முதன்முதலாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றியை பதிவு செய்துள்ளார்.



முதல் முயற்சியிலேயே, தந்தையை மிஞ்சி, உதயநிதி வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில்,  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில்,

வங்கக் கடலோரம் தன் அண்ணனுக்கு பக்கத்தில் துயில் கொள்ளும் முத்தமிழறிஞருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட என் மீது நம்பிக்கை வைத்து, 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த உங்களுக்காக உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருந்து கடமையாற்றுவேன் என என் தொகுதி மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இணைந்து பயணிப்போம்; முன்மாதிரி தொகுதியாக்குவோம்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், எனக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்ட அண்ணன் தயாநிதி மாறன் எம்.பி., மா. பொறுப்பாளர் ப. செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News