செய்திகள்
கொரோனா தடுப்பூசி

போதிய அளவில் தடுப்பூசி வந்ததும் 18 வயது மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும்- சுகாதாரத்துறை

Published On 2021-05-02 11:57 GMT   |   Update On 2021-05-02 11:57 GMT
திருப்பூரில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கொரோனா தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், உயிர் இழப்புகள் அதிகரித்திருப்பதாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

அதன் படி நேற்று 1-ந்தேதி முதல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. முன்னதாக தடுப்பூசி செலுத்தி கொள்ள விரும்புவோர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். ஆனால் பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான தடுப்பூசி திருப்பூருக்கு வரவில்லை. இதனால் தடுப்பூசி செலுத்தவில்லை. ஏற்கனவே தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய அளவில் தடுப்பூசி வந்தவுடன் அரசு அறிவுறுத்தலின் படி 18 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றனர்.
Tags:    

Similar News