செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2021-04-29 03:15 GMT   |   Update On 2021-04-29 03:15 GMT
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.

இந்நிலையில், வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக கடலோரப் பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் கர்நாடகாவில் இருந்து தென்கேரளா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 29-ந் தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழக உள்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை, அடுத்து வரும் 3 நாட்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாக இருக்கும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News