செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: திருமண நிகழ்ச்சிகளுக்கு அரசு விலக்கு அளிக்குமா? மணமக்கள் வீட்டார் எதிர்பார்ப்பு
முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சிகளுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என மணமக்கள் வீட்டார் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
திருச்சி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 20-ந் தேதி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவு நேர ஊரடங்கால் இரவு 9 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டு விடுகின்றன.
பஸ் போக்குவரத்து சேவை இரவு 10 மணிக்குள் நிறுத்தப்படுகிறது. இதனால் பொது மக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (25-ந் தேதி) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் சுபமுகூர்த்த தினமாகும். அன்று அதிகமான திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மண்டபங்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்று பஸ் போக்குவரத்து உள்ளிட்ட எந்த வாகனமும் ஓடாது. எனவே, திருமணங்களை எப்படி நடத்துவது என்று பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் திணறி வருகிறார்கள்.
இது குறித்து திருமண வீட்டார் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அன்றைய தினம் திருமணங்கள் நடத்த முடிவு செய்து விட்டோம். இந்த நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளுக்கு, 100 பேருக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தாலும் அது உள்ளூர்காரர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். மணமகன், மணமகள் யாராவது ஒருவர் வெளியூரில் இருந்தால் அவர்களும், அவர்களது வீட்டாரும் வாகனங்களில் வந்து செல்வதில் பிரச்சினை உள்ளது. ஒருநாள் முன்னதாக திருமண மண்டபத்திலேயே தங்கினால் அரைநாள் வாடகை, மின் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. திருமணத்துக்கு வரும் மங்கள வாத்தியக்குழுவினர், போட்டோ கிராபர், சமையல் குழுவினர் உள்ளிட்ட அனைத்து பணி நிமித்தம் தொடர்பானவர்களும் அன்று அவரவர் வாகனங்களில் புறப்பட்டு வருவதிலும் பெரும் இடையூறு உள்ளது. எனவே, தமிழக அரசு திருமணத்துக்காக, வாகனங்களில் சென்று வருவோருக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்து அனுமதி வழங்க வேண்டும்” என்றனர்.