செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-04-23 14:25 GMT   |   Update On 2021-04-23 14:25 GMT
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 738 ஆக அதிகரித்தது.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் பொதுப்பணித்துறை என்ஜினீயர், அரசு பள்ளி ஆசிரியைகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கல்லூரி பேராசிரியர் உள்பட 223 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,961 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் 77 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 638 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 112 பேர் இறந்து விட்ட நிலையில், 1,211 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் முதல் முறையாக ஒருநாள் பாதிப்பு 223 என்கிற புதிய உச்சத்தை தொட்டது. அதிவேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குவதால், பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News