தஞ்சையில் தெருவில் சுற்றித் திரிந்த கொரோனா நோயாளி மீது வழக்கு
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை அடுத்த புதுப்பட்டினத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று கொள்வதாக கூறிவிட்டு மருத்துவமனைக்கு செல்லவில்லை. ஆனால் அந்த நபர் தனிமைப்படுத்தி கொள்ளாமல் தெருக்களில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என தெரிந்திருந்தும் இந்த செயலில் ஈடுபட்டார்.
இது குறித்து புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட அந்த கொரோனா நோயாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த நபர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோல் யாரும் விதிமுறைகளை மீறி செயல்பட கூடாது. அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் அரசு வகுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.