செய்திகள்
கொரோனா சிறப்பு வார்டு

உடுமலை அரசு கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு தயார்

Published On 2021-04-23 10:49 GMT   |   Update On 2021-04-23 14:23 GMT
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஏற்கனவே கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்த இடத்தில், மீண்டும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு தனியாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்ததை தொடர்ந்து கூடுதலாக உடுமலைஎலையமுத்தூர் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 2 கட்டிடங்களில் 100 படுக்கைகளுடன் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு வந்ததால் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இங்கிருந்த கட்டில்கள் மற்றும் மெத்தைகள் மட்டும் அகற்றப்பட்டன. அலுமினியம் பீடிங்கால் அமைக்கப்பட்ட அறைகள் அப்படியே இருந்தன. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இதனால் உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் இடம் பற்றாக்குறை ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, அரசு கலைக்கல்லூரியில் ஏற்கனவே கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்த இடத்தில், மீண்டும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்காக கடந்த 2 நாட்களாக கட்டில்கள் கொண்டு வரப்பட்டு இந்த அறைகளில் போடப்பட்டன. பின்னர் நேற்று மெத்தைகள் கொண்டு வரப்பட்டு கட்டில்களில் போடப்பட்டன. இந்த பணிகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டனர். இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பணிகளை உடுமலை தாசில்தார் ராமலிங்கம், நில வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார், நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.கவுதம், எரிசனம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவவர் டாக்டர் பார்த்திபன், சுகாதார மேற்பார்வையாளர் சோனை, நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன் மற்றும் செல்வம் உள்ளிட்ட நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News