செய்திகள்
போராட்டம்

தருமபுரியில் சுகாதார செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2021-04-23 09:33 GMT   |   Update On 2021-04-23 09:33 GMT
சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகடூர்:

தருமபுரி மாவட்ட கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சாந்தி, உஷாராணி, செந்தா மலர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட செயலாளர் தேன்மொழி வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் தமிழ்செல்வி, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நல சங்க மாநில பொதுச்செயலாளர் சேரலாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் ஏராளமான கிராம சுகாதார செவிலியர்கள், மேற்பார்வையாளர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

சட்டமன்றத் தேர்தல் பணியின் போது உயிரிழந்த செவிலியர் ராதாமணி ஆஷா குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் செவிலியர்களுக்கு ஓய்வறை மற்றும் தனி கழிப்பறை அமைக்க வேண்டும். துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Tags:    

Similar News