செய்திகள்
தற்கொலை

நெல்லை மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2021-04-21 10:54 GMT   |   Update On 2021-04-21 10:54 GMT
நெல்லை மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள குமாரகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கடற்கரையாண்டி. இவருடைய மனைவி சாந்தி. இவர் கணவரிடம் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வரக்கூடாது என்று அடிக்கடி சண்டை போட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று சாந்தி வாழ்க்கையில் வெறுப்படைந்து வி‌ஷம் குடித்து விட்டு தோட்டத்தில் படுத்துக் கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த பிள்ளையார் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜபூபதி. இவரது மகள் கவுரி. (வயது 21). இவர் ஆசிரியை பயிற்சி படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இப்போது மாப்பிள்ளை பார்க்ககூடாது என்றும் படித்து முடிக்கவேண்டும் என்று கவுரி கூறி உள்ளார்.

இதில் ஏற்பட்ட தகராறில் கவுரி வி‌ஷம் குடித்துவிட்டு வீட்டில் படுத்துக்கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை அருகே உள்ள தாழையூத்தை அடுத்த நாராணம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிபாண்டி என்ற ரவி (வயது 35). இவர் கங்கைகொண்டான் சிப்-காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏராளமாக கடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் மனம் உடைந்த இசக்கிபாண்டி நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News