செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கரூரில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

Published On 2021-04-21 09:08 GMT   |   Update On 2021-04-21 09:08 GMT
கரூரில் கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி தீர்ந்து விட்டதாகவும், மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
கரூர்:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. இதனால், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ முகாம்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மருத்துவ ஊழியர்கள் சில நிறுவனங்களுக்கு நேரில் சென்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.

ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டாதவர்கள் தற்போது கொரோனாவின் வீரியம் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனால், கொரோனா தடுப்பூசி விரைவில் தீர்ந்து போயின.

கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கஸ்தூரிபாய் தாய்-சேய் நலவிடுதி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கரூரில் கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி தீர்ந்து விட்டதாகவும், மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு உதாரணமாக கரூர் கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில், கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு மருந்து இல்லாத காரணத்தினால் தற்காலிகமாக தடுப்பூசி போடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான மருந்து வரப்பெற்றதும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும், சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கரூரில் கொரோனா தடுப்பூசி தீர்ந்து விட்டதால் எங்கும் போடப்படவில்லை. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கரூருக்கு தடுப்பூசிகள் வந்துவிடும். அதன்பிறகு பொதுமக்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடப்படும் என்றார்.
Tags:    

Similar News