செய்திகள்
சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பேருந்துகளை தொடர்ந்து ரெயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 20-ந் தேதி (நேற்று) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இரவு ஊரடங்கை தொடர்ந்து சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* மின்சார ரெயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படாது.
* இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்த நிலையத்தில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்படாது.
* ரெயில் சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
* முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கில் ஒரு பங்கு அளவிலேயே ரெயில்கள் இயக்கப்படும்.
* ஞாயிற்றுக்கிழமைகளில் முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்கலாம்.
* வார நாட்களில் 434 புறநகர் ரெயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 86 ரெயில்களும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.