செய்திகள்
தற்கொலை

கோவையில் வெவ்வேறு சம்பவத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2021-04-20 10:58 GMT   |   Update On 2021-04-20 10:58 GMT
கோவையில் வெவ்வேறு சம்பவத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை சிங்காநல்லூர் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ரூக்குமணி ( வயது 80). இவர் கடந்த சில மாதங்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இவர் கண்பார்வை சரியாக தெரியாமலும், காது கேட்காமலும் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ருக்குமணி சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரத்தினபுரியை சேர்ந்தவர் விஜய் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி விமலா தேவி. மது பழக்கத்துக்கு அடிமையான விஜய் 2 முறை தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது மனைவி காப்பாற்றினார். சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த விஜய் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (64). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரேம்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News