தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - சேலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
சேலம்:
சேலம் மாநகராட்சிக்குட்பட் பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வூட்டும் பணிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு மணடலத்திற்கும் 90 களப்பணியாளர்கள் வீதம் மொத்தம் 360 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 களப்பணியாளர்களை கொண்ட குழுவினர் தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் அருகில் உள்ள 200 குடியிருப்புகளுக்கு சென்று கொரோனா தொற்று அறிகுறிகள் எவருக்கேனும் உள்ளதா? என்பதை கண்டறிந்து, அறிகுறி உள்ளவர்களை சளி தடவல் பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் தொற்று கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வைட்டமின் மாத்திரைகள் வழங்குதல், கபசுர குடிநீர் விநியோகித்தல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் வெளியில் வராமல் கண்காணித்தல் ஆகிய பணிகளையும், விழிப்புணர்வூட்டும் பணிகளையும் அவர்கள் செய்து வருகின்றனர்.
மாநகராட்சிப் பகுதிகளில் 3 பேருக்கு மேல் நோய் தொற்று உள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பகுதிக்கு வெளி இடங்களில் இருந்து யாரும் வரவும், கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. நேற்று வரை மாநகராட்சி பகுதியில் 21 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக இருந்தன. தற்போது இதன் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்து உள்ளது.
அஸ்தம்பட்டி மண்டலத்தில் அழகாபுரம்கணக்கு பிள்ளை தெரு, பார்வதி தெரு, முருகன் காடு பெரிய புதூர், குமரன் நகர், காட்டூர் மாடர்ன் பில்டர்ஸ் காலனி ஏ மற்றும் பி, செவ்வாய்பேட்டைநாராயணன் தெரு, வைத்தி தெரு, பாண்டுரங்கநாதர் கோவில் தெரு, தொட்டு சந்திர ஐயர் தெரு, பழனியப்பா நகர் முதல் குறுக்கு தெரு, மெய்யனூர் ஆலமரத்துக்காடு, சங்கர் நகர்; சூரமங்கலம் மண்டலத்தில் ஆர்.டி. பால்தெரு, ரெட்டிப்பட்டி அம்பேத்கர் நகர், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஜி.ஆர். நகர், கோவிந்தம்மாள் நகர், குகை நரசிங்கபுரம் தெரு, தொல்காப்பிய தெரு, கருங்கல் பட்டி மெயின் ரோடு, ஜாரி கொண்டலாம்பட்டி ஸ்ரீ ரங்கன் தெரு; அம்மாப்பேட்டை மண்டலத்தில் செல்வா நகர் கே.என். காலனி, பழனி முத்து தெரு, கிச்சிப்பாளையம் நாரயணன் நகர் 2-வது குறுக்கு தெரு, களரம்பட்டி பிரதான சாலை ஆகிய 25 பகுதிகள் தற்போது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக அம்மாப்பேட்டை மண்டலம், பழனி முத்து தெருவில் தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார பணிகள், பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர் ரவிச்சந்திரன் அப்பகுதியில் குடியிருப்போர்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவதையும் பார்வையிட்டார்.