செய்திகள்
கோப்புபடம்

2-வது அலையில் உருமாறிய கொரோனாவுக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்

Published On 2021-04-18 05:15 GMT   |   Update On 2021-04-18 05:15 GMT
மராட்டியம், டெல்லி, குஜராத், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.

சென்னை:

நாடுமுழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.

மராட்டியம், டெல்லி, குஜராத், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.

இதற்கு முன்புவரை கொரோனா நோய் தாக்கியதன் அறிகுறிகளாக காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, மூச்சுத்திணறல் ஆகியவைதான் இருந்தன.

தற்போது உருமாறி பரவும் கொரோனாவுக்கு புதிதாக 2 அறிகுறிகள் காணப்படுகிறது. இந்த புதிய அறிகுறிகள் கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களிடம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது முதல் அறிகுறி உலர்ந்த வாய், இந்த அறிகுறி கொரோனா தொற்று ஏற்பட்டதும் ஏற்படுவதாகும். பின்னர் தொண்டை வலி, காய்ச்சல் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

2-வது அறிகுறி உலர்ந்த நாக்கு. இது கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் நாக்கை உலர வைக்கும். மேலும் நாக்கின் மீது வெள்ளை புள்ளிகள் தோன்றும். இதனால் உணவு உண்பதில் சிரமம் ஏற்படும். உமிழ்நீர் குறைபாடு காரணமாக உணவை முறையாக மென்று சாப்பிடவும் முடியாது. அதுமட்டுமின்றி பேசுவதிலும் சிரமம் ஏற்படுகிறது.


இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இப்போது 2-வது அலையில் கொரோனாவுக்கு புதுப்புது அறிகுறிகள் தென்படுகின்றன. சிலருக்கு கண்வலி அல்லது கண்ணின் நிறம் ‘பிங்க்’ ஆக மாறுவது போன்ற அறிகுறிகளையும் பார்க்க முடிவதாக ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இவைகளை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகளும், டேட்டாக்களும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

கண்கள் வறண்டு காணப்படும். தொடர்ச்சியான இருமல், அடிவயிற்றை எப்போதும் புரட்டுவது போன்று இருக்கும். புதிதாக தலைவலியும் பலருக்கு இருக்கிறது. ஆரம்பத்தில் காணப்பட்ட அறிகுறிகளின் தொடர்ச்சியாக இந்த புதிய அறிகுறிகளும் இணைந்துள்ளது.

எனவே கண்வலி, தலை வலி என்றாலும் அலட்சியமாக இருக்ககூடாது.

Tags:    

Similar News