செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூரில் ஸ்கூட்டரில் சென்ற 2 பெண்களிடம் 10¾ பவுன் நகைகள் பறிப்பு

Published On 2021-04-17 21:48 GMT   |   Update On 2021-04-17 21:48 GMT
திருப்பூரில் இருவேறு இடங்களில் ஸ்கூட்டரில் சென்ற 2 பெண்களிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 10¾ பவுன் நகைகளை பறித்து சென்றனர்.
நல்லூர்:

திருப்பூர் மாநகரில் உள்ள நல்லூர் போலீஸ் நிலையத்திற்குட்டபட்ட முத்தணம்பாளையத்தில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி நித்யா (வயது 24), இவர் செரங்காட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

15-ந்தேதி இரவு 8 மணியளவில் வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் நித்யா கழுத்தில் அணிந்திருந்த முருக்கு சங்கிலி, தாலி காசு என 5 பவுன் நகைகளை பறித்து சென்றுள்ளனர்.

அதேபோன்று கே.செட்டிபாளையம் சிவசக்தி நகர், 2-வது வீதியில் வசித்து வருபவர் ராமர். இவரது மனைவி ராணி (48). இவர் தனது மகளுடன் இரவு 9 மணியளவில் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பூங்கா நகரில் உள்ள தர்மலிங்கம் தோட்டம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி மோட்டார்சைக்கிளில் பின்னால் வந்து ராணி கழுத்தில் அணிந்திருந்த தாலி, தங்க காசு-2 என 5¾ பவுன் நகைகளை பறித்து சென்றுள்ளார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் நல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்லூர் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News