செய்திகள்
கோப்புப்படம்

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு

Published On 2021-04-17 18:25 GMT   |   Update On 2021-04-17 18:25 GMT
ஒட்டன்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கையன்கோட்டையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு மதுபானம் விற்பனை ஆனது. இதையடுத்து இங்கு பணியாற்றிய மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அந்த பணத்தை கடையில் உள்ள இரும்பு லாக்கரில் வைத்து விட்டு கடையை பூட்டி சென்று விட்டனர்.

பின்னர் அவர்கள் நேற்று மதியம் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து விற்பனைக்காக வைத்திருந்த 528 மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 70 ஆயிரம் ஆகும். திருடர்கள் கடையில் இரும்பு லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த பணத்தை திருடுவதற்காக லாக்கரை உடைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் லாக்கரில் இருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தப்பியது.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News