செய்திகள்
திருவிழா தடை எதிரொலி: நீர்நிலைகளில் வாடிவரும் தாமரை, அல்லி மலர்கள்
திருவிழா தடை எதிரொலியாக நீர்நிலைகளில் பூத்துகுலுங்கும் தாமரை, அல்லி மலர்கள் பறிக்கப்படாததால் அவை வாடிவருகின்றன.
பனைக்குளம்:
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது. கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் திருவிழா நடத்துவதற்கு அரசால் தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் கோவில்களுக்குள் தேங்காய், பழம், பூ, வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களும் கொண்டு செல்வதற்கும் தடையானது தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் திருவிழா நடத்துவதற்கும் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு செல்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கடுக்காய் வலசை, சின்னுடையார் வலசை, தாமரைகுளம், ரெட்டையூரணி உள்ளிட்ட பல கிராமங்களின் நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கான தாமரைப் பூக்களும் மற்றும் அல்லி மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன.
திருவிழா நடத்த தடை எதிரொலியாக கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் யாரும் பூக்களை கொண்டு செல்ல முடியாது என்பதால் இந்த கிராமங்களை சுற்றி உள்ள நீர் நிலைகளில் பூத்துக்குலுங்கும் இந்த தாமரை மற்றும் அல்லி மலர்களை பறிப்பதற்கு பூ வியாபாரிகள் யாரும் வராததால் அந்த மலர்கள் அனைத்தும் செடியிலேயே கிடந்து வாடிக் கருகி வருகின்றன. கடந்த ஆண்டும் இதேபோல் இந்த கிராமங்களை சுற்றி உள்ள நீர் நிலைகளில் ஆயிரக்கணக்கான தாமரை மற்றும் அல்லி மலர்கள் பறிக்காமல் செடியிலேயே பூத்து குலுங்கி கருகிப்போயின என்பது குறிப்பிடத்தக்கது.