செய்திகள்
கருத்து தெரிவித்த ஆசிரியை - மாணவிகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்கலாமா? வேண்டாமா? மாணவிகள், ஆசிரியர்கள் கருத்து

Published On 2021-04-17 02:59 GMT   |   Update On 2021-04-17 02:59 GMT
கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி பொதுத்தேர்வை நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து மாணவிகள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:

பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து மாணவிகள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி பொதுத்தேர்வை நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து மாணவிகள், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பிளஸ்-2 மாணவி அக்‌ஷயா (உயிரி கணிதம்) :-

பொதுத்தேர்வை நடத்தலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. தேர்வை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு தேர்வுக்கும் இடையேயான விடுமுறையை கொஞ்சம் அதிகப்படுத்தினால் நல்லது. தற்போது நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தேர்வை சற்று ஒத்திவைத்தால் நன்றாக இருக்கும். பெற்றோர் பாதுகாப்பாக சென்று வாருங்கள் என்று தான் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆசிரியை சுமதி (வணிகவியல்):-

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுத்தேர்வை நடத்தலாம். மாணவர்களை தேர்வுக்கு ஏற்றாற்போல் தயார்படுத்தி இருக்கிறோம். அவர்களும் தேர்வை எதிர்கொள்ள தைரியமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தேர்வை தள்ளி வைத்தால், அவர்கள் மீண்டும் தேர்வுக்கு தயாராவதில் தொய்வு ஏற்பட்டுவிடும். என்னுடைய மகனும் பிளஸ்-2 பொதுத்தேர்வை தான் எழுத இருக்கிறான்.

மாணவி லக்‌ஷா (கணினி அறிவியல்):-

பொதுத்தேர்வு நடத்த வேண்டும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடத்துவது தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. பாடத்திட்டங்கள் குறைத்திருக்கிறார்கள். மேலும் சற்று குறைத்திருக்கலாம். இப்போதுள்ள நோய்த் தொற்று காரணமாக தேர்வை ஒத்திவைத்தால் நன்றாக இருக்கும். பள்ளிகளில் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வுகள் மூலம் நன்றாக தயாராகி இருக்கிறோம்.



சென்னை அசோக்நகர் பள்ளி தலைமை ஆசிரியை சி.சரஸ்வதி:-

மாணவ-மாணவிகள் மொத்தமாக 6 நாட்களில் 18 மணி நேரத்தை பாதுகாப்பான முறையில் செலவழித்தால், இந்த பொதுத்தேர்வை எழுதி முடித்துவிடலாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுத்தேர்வை நடத்துவதற்கு பள்ளிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. மாணவ-மாணவிகள் முக கவசம், சமூக இடைவெளியை பொதுத்தேர்வு எழுத வரும்போது பின்பற்றுவதை போல, தேர்வு முடிந்து வீடுகளுக்கு செல்லும் வரையிலும் பின்பற்ற வேண்டும்.

மாணவி நிவேதா (கணினி அறிவியல்):-

பொதுத்தேர்வு குறித்த பயம் எதுவும் இல்லை. முக்கிய தேர்வுகளுக்கு இடையிலான விடுமுறை குறைவாக இருக்கிறது. அதை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும். நாங்கள் தேர்வுக்கான பயிற்சிகளில் நன்கு தேறி இருக்கிறோம். எனவே ஏற்கனவே சொன்ன தேதியில் பொதுத்தேர்வை நடத்தலாம்.
Tags:    

Similar News