செய்திகள்
சசிரேகா

ஜோலார்பேட்டை அருகே மகன்களை பார்க்க முடியாத ஏக்கத்தில் தாய் தற்கொலை

Published On 2021-04-16 15:20 GMT   |   Update On 2021-04-16 15:20 GMT
ஜோலார்பேட்டை அருகே மகன்களை பார்க்க முடியாத ஏக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைைய அடுத்த கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு நரசிங்கராஜா என்ற மகனும், சசிரேகா (வயது 35) என்ற மகளும் உண்டு. சசிரேகாவுக்கும், கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த முருகேசனுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு நித்திஷ் (12), விஸ்வா (9) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

முருகேசன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். ஒரு ஆண்டாக கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் தனித்தனியாகப் பிரிந்து வாழ்கின்றனர். சசிரேகா தனது தாய் வீடான ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் பகுதியில் வசித்து வந்தார். இரு மகன்களும் முருகேசனிடம் உள்ளனர். இருவரும், விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கு கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி இருவரும் விசாரணைக்காக கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜரானார்கள். அதன் பிறகு சசிரேகா தனது இரு மகன்களை பார்க்க வேண்டும், எனக் கேட்டுள்ளார். ஆனால் முருகேசன் மகன்களை காண்பிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சசிரேகா தனது மகன்களை பார்க்க முடியாமல் ஏக்கத்தில் இருந்து வந்தார்.

தனது தாய் வீட்டுக்கு வந்த சசிரேகா விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சசிரேகா உயிரிழந்தார். இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News