செய்திகள்
கொலை

அரக்கோணம் அருகே முதியவர் வெட்டிக்கொலை

Published On 2021-04-14 08:53 GMT   |   Update On 2021-04-14 08:53 GMT
அரக்கோணம் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அரக்கோணம்:

அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பெரிய தெருவை சேர்ந்தவர் வரதன் (வயது 75). இவரது மனைவி இறந்து விட்டார். பிள்ளைகள் இல்லாததால் தனியாக வசித்து வந்தார்.

நேற்று இரவு வரதன் வீட்டை பூட்டிவிட்டு தூங்கினார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் முன்பக்க கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து பின்பக்கம் வழியாக சென்று பார்த்தனர். அங்கு தரையில் ரத்தமாக கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் இதுபற்றி தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உடலில் வெட்டு காயங்களுடன் வரதன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

நள்ளிரவில் வீட்டில் தனியாக இருந்த அவரை மர்மநபர்கள் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோத தகராறில் வரதன் கொலை செய்யப்பட்டாரா அல்லது சொத்து தகராறு காரணமா? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News