சென்னையில் 2 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2000-ஐ தாண்டியது
சென்னை:
சென்னையில் கொரோனா நோய் தொற்று பரவல் தினந்தோறும் அதிகரித்தபடி உள்ளது. தினசரி பாதிப்பு 2,500-ஐ நெருங்கி உள்ளது.
நேற்று மட்டும் 2,482 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வீடு தோறும் சென்று உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் பரிசோதனை முகாம்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் கல்லூரி வளாகங்கள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை கொரோனா வார்டுகளாக மாற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது.
சென்னையில் இதுவரை 2 லட்சத்து 69 ஆயிரத்து 614 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 604 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 18 ஆயிரத்து 673 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 7 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் முன்பு இது 4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, அண்ணா நகர் மண்டலத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதே போல் பெருங்குடி மண்டலத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 9 ஆகவும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 8 ஆகவும் உள்ளது.
கோடம்பாக்கம், ராயபுரம், அம்பத்தூர் மண்டலங்களிலும் நோய் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
சென்னையில் மண்டலம் வாரியாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:-
திருவொற்றியூர்-462
மணலி-194
மாதவரம்-719
தண்டையார்பேட்டை-1,260
ராயபுரம்-1,698
திரு.வி.க.நகர்-1,529
அம்பத்தூர்-1,314
அண்ணாநகர்-2,037
தேனாம்பேட்டை-2,109
கோடம்பாக்கம்-1,708
வளசரவாக்கம்-1,026
ஆலந்தூர்-849
அடையாறு-1,115
பெருங்குடி-929
சோழிங்கநல்லூர்-443.