செய்திகள்
தற்கொலை

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-04-13 15:08 GMT   |   Update On 2021-04-13 15:08 GMT
குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை கோவில்பாளையம் அப்துல்கலாம் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வைஷ்ணவி (22). இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜேஷ்குமார் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். இதனால் மனவேதனை அடைந்த வைஷ்ணவி விரக்தியடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல் கோவை அன்னூர் மாசக் கவுண்டன் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (45). கூலி தொழிலாளி. இவரது மனைவி ருக்குமணி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ருக்குமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு கட்டினார். அதற்காக ரூ.4 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அந்த கடனை அவரால் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News