செய்திகள்
விபத்து

சங்கரன்கோவிலில் கார் மோதி கட்டிட தொழிலாளி பலி

Published On 2021-04-12 15:35 GMT   |   Update On 2021-04-12 15:35 GMT
சங்கரன்கோவிலில் கார் மோதி கட்டிட தொழிலாளி பலியானார். ஏர்வாடியில் நடந்த மற்றொரு விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த பெரிய மாரியப்பன் (வயது 50). கட்டிட தொழிலாளி. இவர் சங்கரன்கோவில்- திருவேங்கடம் சாலையில் இருந்து வாணிபர் ஊரணியையொட்டியுள்ள தெரு வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காரும், சைக்கிளும் மோதின.

இதில் பெரிய மாரியப்பன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரிய மாரியப்பனுக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், தீபா, மணிமேகலை என்ற 2 மகள்களும், காளிராஜ் என்ற மகனும் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி எல்.என்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (52). இவர் நெல்லையில் அரசு நெடுஞ்சாலைதுறையில் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று பணி முடிந்து இவரும், அதே அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களான மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஸ்டீபன்சன், மயிலாடியை சேர்ந்த அய்யப்பன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் நெல்லையில் இருந்து வள்ளியூருக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கிருஷ்ணகுமார் ஓட்டினார். ஸ்டீபன்சன், அய்யப்பன் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர். ஏர்வாடி அருகே தளபதிசமுத்திரம் கீழூர் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் வந்த போது, முன்னால் பரமேஸ்வரபுரம் கக்கன்நகரை சேர்ந்த லிங்கேஸ்வரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் திடீர் என திருப்பியதாக கூறப்படுகிறது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கிருஷ்ணகுமார், ஸ்டீபன்சன், அய்யப்பன், லிங்கேஸ்வரன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ஸ்டீபன்சன், அய்யப்பன் ஆகியோர் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியிலும், கிருஷ்ணகுமார் ஏர்வாடி தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News