செய்திகள்
முககவசம் அணியாமல் வந்த பொது மக்களுக்கு போக்குவரத்து போலீசார் தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

தர்மபுரி நகரில் முககவசம் அணியாத 350 பேருக்கு அபராதம்

Published On 2021-04-12 11:36 GMT   |   Update On 2021-04-12 11:36 GMT
தர்மபுரி நகரில் முக கவசம் அணியாமல் வந்த 350 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போலீசார், வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவர்கள் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

தர்மபுரி நகரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரது மேற்பார்வையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் 4 ரோடு, அரசு மருத்துவமனை, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது முககவசம் அணியாமல் வந்த 350 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் அவர்கள் பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கி இனிவரும் காலங்களில் எப்போது வெளியே வந்தாலும் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News