காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை- ஆர்டிஓ விசாரணை
தக்கலை:
தக்கலை அருகே பத்மநாபபுரம் வாழவிலை பகுதியை சேர்ந்தவர் ரித்தீஷ். கூலி தொழிலாளி. இவரும் வெனிஷா (வயது 24) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது ரித்தீஷ் திருச்செந்தூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இங்கு வெனிஷா குழந்தையுடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வெனிஷா வீட்டின் பக்கத்தில் உள்ள வாலிபருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்த தகவல் அவரது கணவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த வெனிஷா விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட வெனிஷா சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணமாகி 4 வருடங்கள் ஆவதால் தக்கலை ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டுள்ளார்.