செய்திகள்
கொலை

திண்டுக்கல்லில் பால் வியாபாரி வெட்டி படுகொலை

Published On 2021-04-12 09:48 GMT   |   Update On 2021-04-12 09:48 GMT
திண்டுக்கல்லில் பால் வியாபாரியை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகில் உள்ள பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு வியாபாரம் முடித்து விட்டு மாலப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது இருளில் மறைந்திருந்த மர்ம கும்பல் திடீரென அவரை பைக்கில் இருந்து கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் பைக் சாலையோரம் கிடப்பதையும், ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டும் சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து முருகேசன் உடலை போலீசார் கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கொலை செய்யப்பட்ட முருகேசனுக்கு பாப்பாத்தி என்ற மனைவியும் 4 மகள்களும் உள்ளனர். 3 மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் வடக்கு மாலைப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி இதே பகுதியை சேர்ந்த தாய் மற்றும் மகளுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். அந்த ரவுடி மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவரை தீர்த்து கட்ட ஒரு கும்பல் முருகேசனை அணுகியதாக அவர் சந்தேகப்பட்டுள்ளார்.

எனவே பால் வியாபாரி முருகேசன் மூலம் தன் உயிருக்கு ஆபத்து என்றும் தனது கள்ளக்காதலை எப்படியும் பகிரங்கப்படுத்தி விடுவார் என்றும் நினைத்த அவர் முருகேசனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

அதன்படி நேற்று இரவு தனியாக வந்த முருகேசனை வழிமறித்து தாக்கி வெட்டி படுகொலை செய்துள்ளனர். இது தொடர்பாக 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

Similar News