செய்திகள்
கோத்தகிரி பேரூராட்சியில் ராயன் தெருவில் குடிநீர் தட்டுப்பாடு- பொதுமக்கள் அவதி
கோத்தகிரி பேரூராட்சியில் ராயன்தெரு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட ராயன் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, அதே பகுதியில் உள்ள தாழ்வான இடத்தில் கிணறு வெட்டப்பட்டு, அங்கிருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து மின் மோட்டாரை வேறு பகுதியில் பொருத்த பேரூராட்சி ஊழியர்கள் கழற்றி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராயன்தெரு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். எனவே உடனடியாக வேறு மின்மோட்டார் பொருத்தி மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர்.