செய்திகள்
மாம்பழம்

சேலம் மார்க்கெட்களில் மாம்பழங்கள் விலை கடும் உயர்வு

Published On 2021-04-11 10:18 GMT   |   Update On 2021-04-11 10:18 GMT
ஆனாலும் கடந்த ஆண்டை விட மாம்பழம் வரத்து குறைவாக உள்ளதால் விலை அதிகமாக உள்ளது. குறிப்பாக சேலம்-பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், பங்கணப்பள்ளி ஆகிய ரக பழங்கள் மார்க்கெட்டுக்கு மிக குறைவாகவே வருகிறது.

சேலம்:

சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது தித்திக்கும் மாம்பழம் தான். சேலம் மாம்பழம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆ ண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கும்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. சேலம் மார்க்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி, நங்க வள்ளி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தினமும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. அதாவது, சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், குண்டு, நடுசாலை, பங்கனப்பள்ளி, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

சேலம் வ.உ.சி. மார்க்கெட், கடை வீதி, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, அஸ்த்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரிகள் மாம்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். தள்ளுவண்டிகளிலும் வியாபாரம் களை கட்டி உள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வமாக வீடுகளுக்கு வாங்கி செல்வதை காணமுடிகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் வாங்கி அனுப்பி வைத்து வருகிறார்கள். ஆன்-லைன் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

ஆனாலும் கடந்த ஆண்டை விட மாம்பழம் வரத்து குறைவாக உள்ளதால் விலை அதிகமாக உள்ளது. குறிப்பாக சேலம்-பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், பங்கணப்பள்ளி ஆகிய ரக பழங்கள் மார்க்கெட்டுக்கு மிக குறைவாகவே வருகிறது. இதனால் இந்த பழங்கள் தறபோது ஒரு கிலோ 200 ரூபாய் வரையும், குண்டு, நடுசாலை, செந்தூரா, கிளி மூக்கு ஆகிய பழங்கள் ரூ. 80 முதல் ரூ. 120 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் நாட்களில் மாம்பழங்கள் வரத்து அதிகரிக்கும் போது பழங்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

மாம்பழ சீசன் தொடங்கினாலும் இன்னும் 15 நாட்களுக்கு பிறகு தான் மாம்பழங்கள் வரத்து அதிகரிக்கும். இதனால் தற்போது விலை அதிகபட்சமாக ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது.

சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும், வட மாநிலங்களுக்கும் மாம்பழம் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனாவால் மாம்பழ விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில் இனி வரும் நாட்களில் கொரோனா ஊரடங்கை கடுமையாக்கினால் மீண்டும் தொழில் முடங்கும் என்பதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News