வெற்றிக்கனியை எட்டிய நிலையில் பேரிடி ஏற்பட்டுள்ளது- பீட்டர் அல்போன்ஸ் வேதனை
காங்கிரசை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் எனக்கு 35 ஆண்டு கால நண்பர். காங்கிரஸ் கட்சியில் எங்களோடு தொடர்ந்து பயணித்தவர். அற்புதமான, கலப்படம் இல்லாத காங்கிரஸ்காரர். பல தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்த அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
இந்தமுறை பெரும்முயற்சி காரணமாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி அதில் மாதவராவை வேட்பாளராக நிறுத்தினர்.
மாதவராவ் மருத்துவ மனையில் இருந்த போது கூட, கூட்டணி கட்சியினர் இரவு-பகலாக அயராது உழைத்தனர். வெற்றிக் கனியை எட்டி பிடிக்கக் கூடிய நிலையில் அவர் உயிரிழந்த செய்தி பேரிடி போல எங்களை தாக்கி இருக்கிறது.
மாதவராவ் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை கூறிக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.