செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

ஜனாதிபதி, பிரதமர் படங்களை அரசு அலுவலகங்களில் வைப்பது குறித்து அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு

Published On 2021-04-11 08:53 GMT   |   Update On 2021-04-11 08:53 GMT
அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலக அதிகாரிகள்தான் முடிவு செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் ஜெயக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, நேரு, பெரியார், அண்ணா, அம்பேத்கர், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களையும், ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஆகியோரது புகைப்படங்களையும் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், தமிழக அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை வைப்பது இல்லை. இவர்களது புகைப்படங்களையும் அரசு அலுவலகங்களில் வைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதே தவிர, இந்த படங்களை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை’ என்று கூறினார்.

அதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் கடந்த முறையும், தற்போதும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் வழக்கை நடத்த விரும்பவில்லை என்று தெரிகிறது. மேலும், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அனுமதி வழங்கினாலும், அது கட்டாயம் இல்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறினார். எனவே, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைப்பது குறித்து அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை முடித்துவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News