செய்திகள்
விபத்து

நாகர்கோவில் அருகே பஸ் விபத்தில் பெண் பலி

Published On 2021-04-10 17:01 GMT   |   Update On 2021-04-10 17:01 GMT
நாகர்கோவில் அருகே கணவர் கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி பெண் பலியானார்.
திங்கள்சந்தை:

பஸ் விபத்தில் பெண் பலியான சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாகர்கோவில் இடலாக்குடி சரக்கல்விளை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி ரீனா பிரியதர்ஷினி (வயது 38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முருகன் சரக்கல்விளை பகுதியில் பெருங்காயம் கம்பெனியை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று ஸ்கூட்டரில் முருகன் தக்கலை பகுதிக்கு சென்றார். உடன் தன்னுடைய மனைவி ரீனா பிரியதர்ஷினியை அழைத்து சென்றார். அங்கு வியாபாரம் தொடர்பான வேலையை முடித்து விட்டு மீண்டும் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டனர். தோட்டியோடு என்ற பகுதியை சென்றடைந்த போது எதிரே திருநெல்வேலியில் இருந்து பேச்சிப்பாறை நோக்கி அரசு பஸ் வந்தது.

இந்தநிலையில் அரசு பஸ், லாரியை முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக தம்பதி சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.

இந்த விபத்தில் முருகன், ரீனா பிரியதர்ஷினி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ஆனால் ரீனா பிரியதர்ஷினி, பஸ் சக்கரத்தில் சிக்கி கொண்டார்.

இதனால் அவர் தலைநசுங்கி அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த முருகன், மனைவி உடலை பார்த்து கதறி அழுதார். அதே சமயத்தில் முருகனும் பலத்த காயமடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிணமான ரீனா பிரியதர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கணவர் கண்முன்னே மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News