14 பேருக்கு கொரோனா- தனியார் நூற்பாலை மூடல்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் திருச்சி கோவை ரோட்டில் வெள்ளமடை என்ற இடத்தில் தனியார் நூல் மில் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றி வந்த 48 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து வருவாய்த்துறை சார்பில் மில் இருக்கும் பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது. அங்கு இருப்பவர்கள் யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி 2 நாட்களுக்கு மில்லை மூட உத்தரவிட்டனர். தொற்று இருப்பவர்கள் வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதே போல் வெள்ளகோவில், உப்புபாளையம் ரோட்டில் தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனால் அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லக்கூடாது. அப்பகுதிக்கு யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இந்த 2 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.