செய்திகள்
கோவை கணபதி மாநகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 2 தி.மு.க.வினர் கைது
கோவை கணபதி மாநகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 2 தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இந்தநிலையில் தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் கணபதி மாநகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி சுமதிக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து அவரது தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டு இருந்த கணபதி மாநகரை சேர்ந்த ரவி பாலு (வயது 46), அதே பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (59) ஆகியோரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.73 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 2 பேரையும் சரவணம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.