செய்திகள்
போலீசார் விசாரணை

முதலமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்- டாக்டர், அரிசி வியாபாரியிடம் போலீசார் விசாரணை

Published On 2021-04-02 10:49 GMT   |   Update On 2021-04-02 10:49 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக சேலத்தை சேர்ந்த டாக்டர் மற்றும் அரிசி வியாபாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சேலம்:

சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனருக்கு கடந்த மாதம் 29-ந் தேதி ரத்த கையெழுத்திட்ட ஒரு கடிதம் வந்தது. அதில் சேலத்தில் பிரசாரம் செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் ராமன் ஆகியோரை குண்டு வெடிக்க செய்து கொலை செய்வோம் என எழுதப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தில் இருந்த பெயர் குறித்து போலீசார் விசாரித்தபோது, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தமிழரசன் (வயது 38) என்பது தெரிய வந்தது. மேலும் கடிதத்தில் தேவி உள்பட 6 பேரின் பெயர்கள் இருந்தது. அன்னதானப்பட்டி போலீசார் தமிழரசனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

உண்மையில் அந்த கடிதத்தை அவர் எழுதினாரா அல்லது அந்த கடிதத்தில் குறிப்பிட்ட பெயரில் உள்ளவர்கள் யாராவது எழுதினார்களா? வேறு நபர்கள் யாராவது அவரை பழி வாங்க இதனை செய்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், அந்த குடியிருப்பில் கால்நடை டாக்டர் ஒருவர் தங்கி இருந்ததும், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து காலி செய்ததும், அவருக்கும் தமிழரசனுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததும் தெரிய வந்தது . இதனால் தமிழரசனை பழி வாங்க அந்த டாக்டர் இந்த கடிதத்தை எழுதினாரா, அல்லது தமிழரசன் எழுதினாரா என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து 2 பேரின் கைரேகைகளையும் , அந்த லெட்டரில் இருந்த கைரேகையையும் ஒப்பிட்டு பார்த்து போலீசார் கால்நடை டாக்டர் மற்றும் அரிசி வியாபாரி தமிழரசனிடம் விசாரணை நடத்தினர். மேலும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் பரபரப்பு நிலவி வருகிறது.
Tags:    

Similar News