செய்திகள்
வருமானவரித்துறை சோதனை நடந்த அமரேசன் பங்களா.

ஆண்டிபட்டியில் அதிமுக நிர்வாகி வீட்டில் ரூ.2.17 கோடி பணம் பறிமுதல்

Published On 2021-04-01 10:48 GMT   |   Update On 2021-04-01 10:48 GMT
ஆண்டிபட்டியில் அதிமுக நிர்வாகி வீட்டில் பதுக்கியிருந்த ரூ.2.17 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வெள்ளைத்தேவன்பட்டியை சேர்ந்தவர் அமரேசன். இவர் அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளராகவும், தொழிலதிபராகவும் உள்ளார். மேலும் ஆண்டிபட்டி காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளதுடன் விவசாயம் பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக இத்தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் லோகிராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார்.

இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பணம் பதுக்கி இருப்பதாக வருமானவரித்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து அமரேசன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் 4 பேர் வீடுகளில் நேற்றுமாலை மதுரை மண்டல துணை இயக்குனர் பூவலிங்கம் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மாலையில் தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. மற்ற 3 இடங்களிலும் நகை, பணம் எதுவும் சிக்காத நிலையில் அமரேசன் பங்களாவில் சோதனை நடத்தியபோது கணக்கில் வராத ரூ.2 கோடியே 17 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.

அந்த பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர். மாலையில் தொடங்கிய சோதனை நள்ளிரவு 1 மணிக்கு நிறைவடைந்தது. இந்த பணம் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை சோதனையில் முதன்முறையாக தேனி மாவட்டத்தில் ரூ.2 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

Similar News