செய்திகள்
கைது

ஒரத்தநாட்டில் சுயேட்சை வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Published On 2021-03-31 11:26 GMT   |   Update On 2021-03-31 11:26 GMT
ஒரத்தநாட்டில் சுயேட்சை வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு:

பட்டுக்கோட்டை தாலுகா கரம்பயம் கிராமம் மணிமொழி நகரைச் சேர்ந்தவர் மூக்கையன். (வயது 48). இவர் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர் மூக்கையன் தனது ஆதரவாளர்கள் சிலருடன் கார், மினி வேனில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொட்டலங்குடிக்காடு என்ற கிராமத்தில் வாக்கு சேகரித்து விட்டு திரும்புகையில், அதே கிராமத்தை சேர்ந்த 3 பேர் குடிபோதையில் வாகனங்களை வழிமறித்து, நீங்கள் எப்படி இங்கே வாக்கு கேட்டு வரலாம் எனக் கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மூக்கையனும் அக்கிராமத்தை சேர்ந்தவர்களும் கொலை மிரட்டல் விடுத்த 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி ஒரத்தநாடு-மன்னார்குடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பதற்றம் ஏற்பட்டது.

தகவலறிந்த ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனர்.

அதன் பின்னர், வேட்பாளர் மூக்கையன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரகு (32) என்பவரை கைது செய்தனர். மற்ற இருவரும் 16 வயது சிறுவர்கள் என்பதால் அவர்களின் எதிர்கால நலன் கருதி எச்சரித்து அனுப்பினர்.
Tags:    

Similar News