செய்திகள்
கோப்பு படம்.

நெல்லையில் மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி பலி

Published On 2021-03-29 12:17 GMT   |   Update On 2021-03-29 12:17 GMT
நெல்லையில் தள்ளுவண்டியை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை:

நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த மேலக்கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன். இவர் சேரன்மாதேவி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன்கள் கிட்டு (வயது 29), அருண் (27).

இவர்கள் 2 பேரும் நெல்லை மேலப்பாளையம் விஜயா கார்டன் பகுதியில் சாலையோரம் டீக்கடை நடத்தி வந்தனர். மேலும் தங்களது கடையின் முன்பாக தள்ளுவண்டியில் துரித உணவகத்தையும் நடத்தினர். இதற்காக டீக்கடையில் இருந்து தள்ளுவண்டிக்கு மின் இணைப்பு கொடுத்து மின்விளக்கு அமைத்து இருந்தனர்.

நேற்று முன்தினம் காலையில் கிட்டு, அருண் ஆகிய 2 பேரும் தங்களது டீக்கடைக்கு சென்று வேலை செய்தனர். மாலையில் தள்ளுவண்டியில் துரித உணவு வகைகளை விற்பனை செய்தனர். பின்னர் இரவில் வேலை முடிந்ததும், அவர்கள் கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். துரித உணவகத்துக்காக பயன்படுத்திய தள்ளுவண்டியையும் சுத்தம் செய்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிட்டு, அருண் ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கிட்டுவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அருணுக்கு திருமணமாகவில்லை.

நெல்லையில் தள்ளுவண்டியை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News