செய்திகள்
வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி?- ஐகோர்ட் கேள்வி
வாக்காளர்களின் மொபைல் எண்களை சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:
புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், வாக்காளர்களின் மொபைல் எண்களை சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாகவும், இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் புகார் குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்தனர்.
‘வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்து, அதை கண்டுபிடிக்க முடியாதா? ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா? என கேள்வி எழுப்பினர். அத்துடன், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.