செய்திகள்
கைது

வேலை செய்த வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது

Published On 2021-03-24 02:23 GMT   |   Update On 2021-03-24 02:23 GMT
காதலனை கைப்பிடிக்க வேலை செய்த வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை:

சென்னை கோபாலபுரம், கணபதி காலனி, 2-வது தெருவைச் சேர்ந்தவர் லதா ராவ் (வயது 78). இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டு பீரோவில் இருந்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகள் திருட்டு போய் விட்டது. பீரோ உடைக்கப்படவில்லை. ஆனால் நகைகள் திருட்டு போய் இருந்தது.

இதுபற்றி ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வீட்டு வேலைக்காரபெண் சோனா (22) மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. நகை திருட்டு போன சமயத்தில் சோனா, தனக்கு திருமணம் நடைபெறப்போகிறது என்று சொல்லி வேலையை விட்டு நின்று விட்டார். மேலும் அவர் தனது காதலனை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2½ ஆண்டாக வீட்டு வேலை செய்து வந்த சோனாவை பிடித்து, போலீசார் விசாரித்த போது, அவர்தான் நகையை திருடியது தெரியவந்தது. தனது காதலனை கைப்பிடிப்பதற்கு அவருக்கு நகை தேவைப்பட்டது. இதனால் வேலை பார்த்த வீட்டில் கைவைத்து விட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டது.
Tags:    

Similar News