செய்திகள்
திருவானைக்காவல் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருவானைக்காவல் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது. மேலும் பக்கத்து வீட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
ஸ்ரீரங்கம்:
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் நகர் விஸ்தரிப்பு பகுதியில் வசித்து வருபவர் பாண்டுரெங்கன் (வயது 70). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் கூலித்தொழிலாளி ஜெயக்குமார் (45) வசித்து வருகிறார். இந்த குடியிருப்பில் அடுத்தடுத்து 3 வீடுகள் உள்ளன.
இந்நிலையில் பாண்டுரெங்கன் கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். நேற்று காலை பாண்டுரெங்கன் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டினர், அதே பகுதியில் வசிக்கும் பாண்டுரெங்கனின் மகன் ராஜ மாணிக்கத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் உடனே விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் இருந்த 3 பவுன் நகை, வெள்ளி அரைஞான் கொடி, வெள்ளி கொலுசு, ரூ.25 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதனால் அவர் நடந்த சம்பவம் பற்றி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ஜெயக்குமாரின் மோட்டார் சைக்கிளும் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து, இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.