திருமங்கலத்தில் வேனுடன் 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்- டிரைவர் கைது
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சரக்கு வேனை நிறுத்தி விசாரித்தனர்.
அதனை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள பனையடிபட்டியைச் சேர்ந்த மாடசாமி (வயது32) முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனை திறந்து சோதனையிட்டனர். வேனுக்குள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.
இதனை தொடர்ந்து 2 டன் மதிப்பிலான புகையிலை பொருட்களை வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலத்தில் இருந்து விருதுநகருக்கு புகையிலை பொருட்கள் கொண்டு செல்லப்படுவது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக டிரைவர் மாடசாமியை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சம் என கூறப்படுகிறது.